பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்த 150 பேர் பாஸ்போர்ட் முடக்கம்: வெளியுறவுத்துறை அதிரடி
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத 150 பேரின் பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிரடியாக முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி, ரூ. 12,000 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மோசடி செய்த நீரவ் மோடி தற்போது சீனாவின் ஹாங்காங்கில் தலைமறைவாக இருந்து வருகிறார்.
அவரை கைது செய்து இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. வங்கியில் கடன்பெற்று விட்டு அதை கட்டாமல் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கியில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரை ரூ. 57 ஆயிரத்து 519 கோடி வாராக்கடன் உள்ளது. கடனை திருப்பி செலுத்தாத 1,084 பேர் அடங்கிய பட்டியலை வங்கி நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது.
இதில், 37 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க வங்கியில் ரூ. 50 கோடிக்கு மேல் கடன் வாங்கியவர்கள் பாஸ்போர்ட் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட 150 பேர் அடங்கிய பட்டியலை மத்திய அரசிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கிய நிலையில், அவர்களது பாஸ்போர்ட்டை வெளியுறவுத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.