வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்: ரிசர்வ் வங்கி உத்தரவு

புதுடெல்லி: வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆதார் என்பது தற்போது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

அரசு மானியங்கள், செல்போன் சேவை, லைசென்ஸ், எரிவாயு மானியம் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை இணைக்க வேண்டியுள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

கே. ஒய். சி. எனப்படும், ‘உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்’ என்னும் நடைமுறைப்படி, வாடிக்கையாளர்களின் விவரங்களை வங்கிகள் சரிபார்ப்பது வழக்கம்.



இதற்காக வாடிக்கையாளர் முகவரி, பான் எண் ஆகியவற்றை வங்கிகள் பெற்று வருகின்றன. இந்நிலையில், வங்கி கணக்குடன் ஆதாரையும் கட்டாயம் இணைக்க வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில், இது உச்ச நீதிமன்றம் வழங்க உள்ள இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பயோமெட்ரிக் அடையாள அட்டைக்கு  விண்ணப்பம் செய்பவர்களிடம் ஆதார் எண், பான் எண் அல்லது படிவம் எண்-60 ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு கடந்த மாதம் நீட்டித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் காலக்கெடு தேதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



.

மூலக்கதை