இந்தியா – பிரிட்டன் முதலீடு அதிகரிக்கும்
புதுடில்லி : ‘இந்தியா – பிரிட்டன்இடையே, தயாரிப்பு, ராணுவம், மருந்து உள்ளிட்ட துறைகளில், பரஸ்பர முதலீடுகளை அதிகரிக்க, எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன’ என, பிரிட்டன் இந்தியா வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை: இந்தியாவில், மின்னணு தொழில்நுட்ப பயன்பாடு பரவலாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு, சாதனங்கள் இடையிலான இணைய பயன்பாடு, பிளாக்செயின், ‘3டி’ பிரின்டிங் போன்ற தொழில்நுட்பங்களைக் கொண்ட, நான்காம் தொழில் புரட்சியில், எண்ணற்ற வர்த்தகங்கள் உருவாகி வருகின்றன. அவற்றில், இந்தியா – பிரிட்டன் பரஸ்பர முதலீடுகள் மேற்கொள்ள, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
தொழில் புரிவதை சுலபமாக்கும் நடைமுறைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், நல்ல பயன் கிடைக்கும்; முதலீடுகள் பெருகும்; பரஸ்பர பொருளாதாரம் வளர்ச்சி காணும்.அன்னிய நேரடி முதலீடுகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய, பரஸ்பர முதலீட்டு ஒப்பந்தம், இந்தியா – பிரிட்டன் இடையே, நீண்டகால வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை வலுப்படுத்த துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.