தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை: இந்தியா வலியுறுத்தல்
லண்டன் : தேசியக்கொடியை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என இங்கிலாந்தை இந்தியா வலியுறுத்தி உள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்ற சதுக்கத்தில் குவிந்திருந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், 500 இந்தியர்கள், மோடிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது காமன்வெல்த் மாநாட்டையொட்டி அங்கு ஏற்றப்பட்டு இருந்த இந்திய தேசியக்கொடியை, கொடிக்கம்பத்தில் இருந்து இறக்கிய சிலர் அதை கிழித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. இதை படம் பிடித்த இந்திய தொலைக்காட்சி நிருபரை போராட்டக்காரர்கள் தாக்கினர். அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மீட்டனர்.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் பேசுகையில், “தேசியக்கொடி சம்பவம் எங்களை மிகவும் வேதனையில் ஆழ்த்தி உள்ளது. உயர்மட்ட அளவில் இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவித்து உள்ளது. அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதும் இந்திய தேசியக்கொடி மாற்றப்பட்டது.
இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மைதானத்தில் போராட்டம் நடைபெற்ற போது இச்சம்பவத்தில் தொடர்புடைய பொறுப்பாளிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கையை எடுக்க வேண்டும்,” என்றார்.