கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக சட்டமன்றத்துக்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் சந்திரசேகர கம்பாராவை வாக்குப்பதிவு விழிப்புணர்வு தூதராக நியமித்துள்ளோம். கர்நாடகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது.

இதனால் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரித்துள்ளோம்.



பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும். கர்நாடக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும்.

சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால் மனு தாக்கல் நடைபெறவில்லை.

அதனால் கடந்த 2 நாட்களில் மாநிலம் முழுவதும் 155 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெங்களூருவில் மட்டும் 28 மனுக்கள் தாக்கலாகி இருக்கின்றன.

வாக்காளர்கள் இடையே ஓட்டுப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு வீடியோவை தயாரித்து உள்ளோம்.

அதில் நடிகர் புனித் ராஜ்குமார், நடிகை பிரணிதா மற்றும் ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா ஆகியோரின் பேச்சுகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ தொலைக் காட்சிகளில் வெளியிடப்படும்.

இவ்வாறு சஞ்சீவ் குமார் கூறினார்.


.

மூலக்கதை