தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும் மறுமலர்ச்சி
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாகவே பல பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கின்றன. பைரசி, ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி என பல விதங்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதனிடையே, டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் திரைப்படங்களின் தியேட்டர் திரையீட்டுக் கட்டணத்தை திடீரென உயர்த்தின. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் 1ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிடாமல் தயாரிப்பாளர் சங்கம் நிறுத்தி வைத்தது. அதற்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஆதரவு அளித்தனர்.
அந்த வேலை நிறுத்தத்தைக் குலைக்க சிலர் தரப்பிலிருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளும், தயாரிப்பாளர்களின் ஒற்றுமையால் தோல்வியடைந்தன. கடைசியில் அரசு தரப்பில் தலையிட்டு ஒரு முடிவக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி, சில பல நல்ல புதிய விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அதன்படி டிஜிட்டல் கட்டணக் குறைப்பு, படங்களுக்கேற்றபடியான தியேட்டர் டிக்கெட் கட்டண நிர்ணயம், சென்சார் வரிசைப்படி பட வெளியீடு, ஆன்லைன் முன்பதிவுக் கட்டணக் குறைப்பு என சில புதிய முடிவுகள் எடுக்கப்பட்டன. எந்த நோக்கத்திற்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றதோ அதில் பல விஷயங்களில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. அது உள்ளது உள்ளபடி தொடர்ந்தால் தமிழ் சினிமாவுக்கு மறுமலர்ச்சி தான்.