கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஏப். 29 முதல் மோடி பிரசாரம்: 20 பொது கூட்டங்களில் பங்கேற்க முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஏப். 29 முதல் மோடி பிரசாரம்: 20 பொது கூட்டங்களில் பங்கேற்க முடிவு

பெங்களூரு: பிரதமர் நரேந்திரமோடி வரும் 29-ந் தேதி கர்நாடகத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜ  வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

24-ந் தேதி மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிந்து, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர் வருகிற 29-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தை கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து தொடங்குகிறார்.

அதைத்தொடர்ந்து மே மாதம் 1-ந் தேதி பல்லாரி, பெலகாவி ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

3-ந் தேதி சாம்ராஜ்நகர், உடுப்பி, 5-ந் தேதி கலபுரகி, உப்பள்ளி, 6-ந் தேதி சிவமொக்கா, துமகூரு, 7-ந் தேதி மங்களூரு, பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெறும்  பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களிடையே பாஜவுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

மே 10-ந் தேதி வரை மோடி 20 பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதாக பாஜ தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி மட்டுமின்றி பாஜ தேசிய தலைவர் அமித்ஷா, உ. பி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ம. பி, சத்தீஸ்கர், கோவா மாநில முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, உமாபாரதி, ஸ்மிருதி இரானி உள்ளிட்டோரும் கர்நாடகாவில் முகாமிட்டு பாஜ வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.   இதற்கிடையில் பாஜ 2வது வேட்பாளர் பட்டியலில் பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கும், இரும்பு தாது ஊழல் வழக்கில் சிக்கிய ரெட்டி சகோதரர்களின் இளைய சகோதரருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை