தெலங்கானாவில் 15 வயது சிறுமியை கடத்தி 14 பேர் கும்பல் பலாத்காரம்

தினகரன்  தினகரன்

திருமலை: தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி மாவட்டம், பாண்டுரங்காபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. 8ம் வகுப்பு வரை படித்த இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்காமல் பெற்றோருடன் கூலிதொழில் செய்து வருகிறார்.கடந்த 13ம்தேதி சிறுமி சாக்லெட் வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அங்கு தனது பெற்றோருடன் கூலித்தொழில் செய்தபோது பழக்கமான வினோத், கிரண், பரத், நவீன், ஏசு ஆகிய 5 வாலிபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து ஆட்டோவில் ஏற்றி கடத்திச்சென்றனர்.அகிலபல்லி மல்லாரம் என்ற இடத்தில் 5 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் தங்களது நண்பர்கள் 9 பேருக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அவர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்களாம். அப்போது இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என மிரட்டி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அமராரம் என்ற கிராமத்தில் சமிரெட்டி என்பவரின் வீட்டில் விட்டு விட்டு அந்த கும்பல் தப்பி விட்டது.சிறுமிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அறிந்த சமிரெட்டியும்(45) அவரை தனது வீட்டிலேயே  அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமிரெட்டி வெளியே சென்றபோது சிறுமி அங்கிருந்து தப்பியுள்ளார். ஜெய்சங்கர் மாவட்டம், பாஜாடு பகுதியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது பெற்றோர் சிறுமியின் அண்ணனுக்கு போன் செய்து, தங்கையை 2நாளாக தேடியும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.அதற்கு அவர், தங்கை எனது வீட்டில்தான் இருக்கிறாள் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து பெற்றோர் வந்து சிறுமியை அழைத்து சென்றனர். ஏன் எங்களிடம் சொல்லாமல் அண்ணன் வீட்டுக்கு சென்றாய் என்று கேட்டனர்.அப்போது கதறி அழுத சிறுமி, வினோத் உள்பட 5 பேரும் தன்னை ஆட்டோவில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உள்பட நடந்த விவரங்கள் அனைத்தையும் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளிக்க சென்றனர். இதையறிந்த அந்த 5 வாலிபர்களும் போலீசில் புகார் அளிக்காமல் இருக்க 5 லட்சம் தருவதாக சமரசம் பேசியுள்ளனர். ஆனால் சிறுமியின் பெற்றோர் கனபாக்கம் போலீசில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், கிரண், பரத், நவீன், ஏசு உள்பட 14 பேரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஆட்டோ, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள சமிரெட்டியை தேடி வருகின்றனர். சிறுமியை கடத்தி 15பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மூலக்கதை