தொப்புள் கொடியோடு மருத்துவமனையில் கைவிடப்பட்ட குழந்தை!
புதிதாகப் பிறந்த சிசு ஒன்று தொப்புள் கொடியோடு மருத்துவமனையின் அவசரப் பிரிவில் கைவிடப்பட்டது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அந்த மருத்துவமனையின் ஊழியர்கள் குழந்தையை நோயாளிகள் காத்திருக்கும் இடத்தில் கண்டெடுத்தனர்.
தற்போது நலமாக இருக்கும் ஆண் சிசுவின் தாயாரைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மருத்துவமனை.
கண்காணிப்புக் கேமராக்களில் குழுந்தையுடன் இரு பெண்கள் மருத்துவமனைக்குள் நுழைவதும், குழந்தை இல்லாமல் அவர்கள் மருத்துவமனையை விட்டுச் செல்வதும் பதிவாகியுள்ளது.
இரு பெண்களில் ஒருவர் குழந்தைக்குத் தாயாராக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.
பிள்ளையின் தாயாரைத் தங்களைத் தொடர்புகொள்ள முன்வருமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அவருக்கு மருத்துவ உதவியும் மனநல உதவியும் வழங்கத் தயாராய் உள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் பற்றித் தெரிந்தவர்கள், அதுபற்றிய விவரங்களைத் தெரிவிக்க முன்வருமாறு காவல்துறை கோரியுள்ளது.