காவிரி மேலாண்மை வாரியம்: 29-ந்தேதி வரை பொறுத்து இருப்போம் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

PARIS TAMIL  PARIS TAMIL
காவிரி மேலாண்மை வாரியம்: 29ந்தேதி வரை பொறுத்து இருப்போம் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டுமென்று அம்மாநில முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகி அழுத்தம் தந்திருக்கிறார். அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதனை ஆதரிப்பதாகவும் அறிவித்து, மாநில உரிமையை பெறுவதில் அவர் தருகின்ற அழுத்தத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில், இந்த அவையை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற காலக்கெடு 6 வாரம். அது வரும் 29-ந்தேதியோடு முடிவடைகிறது. இடையில் 9 நாட்கள் மட்டுமே இருக்கின்றன.

எனவே, மாநில உரிமையை பாதுகாக்க பக்கத்தில் இருக்கின்ற மாநிலத்தின் முதல்-அமைச்சர் எந்தளவுக்கு முனைப்போடு ஈடுபட்டு இருக்கிறாரோ, அதே முனைப்போடு மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இந்த அரசு மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அ.தி.மு.க.வின் சார்பில் இருக்கின்ற 37 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தி அனுப்பி, அந்த தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென்று, நான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இதனால், மத்திய அரசு கவிழ்ந்து விடப்போவதில்லை. அதற்கான வாய்ப்பு கிடையாது. இருந்தாலும், மத்திய அரசுக்கு அழுத்தம் தருகின்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்கான விளக்கத்தை முதல்-அமைச்சரிடம் இருந்து அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதற்கு பதில் அளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த 6 வார கால உத்தரவு முடிவடைய இன்னும் நேரம் இருக்கிறது. அதுவரை நாம் பொறுமையோடு இருந்துதான் பார்க்க வேண்டும்.

ஏனென்றால், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பெற்றிருக்கிறது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி ஒரு தீர்மானமும் நாம் நிறைவேற்றி இருக்கிறோம். இந்த மாதம் 29-ந்தேதி வரை நாம் பொறுத்திருந்து பார்ப்போம். பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கையில் நாம் இறங்குவோம்.

6 வார காலத்திற்குள் உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல் படுத்திடுமாறு அ.தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியதன் காரணமாக, ஒரு வார காலமாக நாடாளுமன்றமே முடக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை, தமிழக அரசியல் வரலாற்றில், பொதுப் பிரச்சினையை நாடாளுமன்றத்திற்கு எடுத்துக்கொண்டு சென்று, தொடர்ந்து ஒரு வார காலம் முடக்கப்பட்டதாக வரலாறே இல்லை. அந்த வரலாற்றை அ.தி.மு.க. எம்.பி.க்கள் அங்கே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித்தலைவர் பக்கத்து மாநிலத்தில் ஒரு நல்ல முடிவை எடுத்திருக்கிறார்கள் என்ற கருத்தை இங்கே சொன்னார்கள். அது அந்த மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவர்கள் அந்த மாநிலத்திற்கு சிறப்பு நிதி அந்தஸ்து வேண்டுமென்று கேட்கிறார்கள். அது அவர்களுக்குள்ள பிரச்சினை. அதையும், இதையும் முடிச்சுப்போட வேண்டாம் என்று நான் எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அவர்கள் 4½ ஆண்டுகள் மத்திய அரசுடன் கூட்டணி அமைத்து, அந்த கட்சியுடன் இணைந்திருந்தார்கள். அது அவர்களுடைய பிரச்சினை. இதில், நம்முடைய நதிநீர் பங்கீடு பிரச்சினையை இணைத்து, ஏதோ அவர்கள்தான் தங்களுடைய மாநில உரிமைக்காக போராடுகிறார்கள் என்பது போலவும், நாம் அதைச் செய்யவில்லை என்பது போலவும் எதிர்க்கட்சி தலைவர் ஒரு பெரிய மாயத் தோற்றத்தை இங்கே உருவாக்க முயலுகிறார். ஆனால், அந்த மாயத்தோற்றம் எடுபடாது.

ஏனென்று சொன்னால், காவிரி பிரச்சினையில் நாம் அனைவரும் ஆரம்ப காலகட்டத்திலிருந்து எடுத்து வருகின்ற நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள், அதிலும் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை, தமிழகத்தினுடைய ஜீவாதார உரிமைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அவர் எடுத்த நிலை வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பதிவை அ.தி.மு.க. அரசு தொடர்ந்து நிலைநிறுத்தும்.

ஏனென்றால், உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அந்த தீர்ப்பின் மீது நாம் இப்போது விவாதிக்க முடியாது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, நாம் பொறுமையாக இருப்போம். இது தொடர்பாக மேற்கொண்டு ஒன்றும் நடக்கவில்லை என்றால் மீண்டும் நாம் அனைவரும் கூடி ஒரு நல்ல முடிவை எடுப்போம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மூலக்கதை