பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார்

PARIS TAMIL  PARIS TAMIL
பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார்

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

அப்போது கணவரை பார்ப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாட்கள் ‘பரோல்’ வழங்கப்பட்டது. அவர் சென்னை வந்து, கணவரை பார்த்தார். அப்போது, அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பது உள்பட அவருக்கு பல்வேறு நிபந்தனைகளை சிறைத்துறை நிர்வாகம் விதித்து இருந்தது.

இந்த நிலையில்  சசிகலாவின் கணவர் நடராஜன்  சென்னை மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி  உயிரிழந்தார். நள்ளிரவு 1.30 மணிக்கு சசிகலா கணவர் ம.நடராஜன் உயிர் பிரிந்தது.

 காலை 7 மணி முதல் பெசன்ட் நகரில் உள்ள இல்லத்தில் 11 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக  வைக்கப்படுகிறது.  அதனை தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெற உள்ளது. பெசன்ட் நகர் இல்லத்தில் அவரது ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையில், பெங்களூரு சிறையில் பரோல் கோரி இன்று காலை 11 மணிக்கு சசிகலா மனு அளிக்கிறார். சசிகலாவுக்கு உடனடியாக பரோல் வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. பரோல் கிடைத்ததும் பெங்களூரு சிறையில் இருந்து நேரடியாக சசிகலா தஞ்சை செல்கிறார்.

மூலக்கதை