சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

தினமலர்  தினமலர்
சசிகலா கணவர் நடராஜன் காலமானார்

சென்னை: உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன் இன்று(மார்ச் 20) நள்ளிரவு 1.35 மணிக்கு காலமானார்.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் உள்ள, சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு, 2017 அக்டோபரில், ஒரே நேரத்தில், கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்தது; சிகிச்சை முடிந்து, நவம்பரில், வீடு திரும்பினார்.

இந்நிலையில், மார்பு பகுதியில் நோய்த்தொற்று ஏற்பட்டு மார்ச் 16ல், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும், நடஜரானின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் இன்று(மார்ச் 20) நள்ளிரவு நடராஜன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, எம்பாமிங் செய்வதற்காக ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் சென்னை பெசன்ட் நகர் வீட்டில் நடராஜன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. காலை 11 மணிக்கு அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

நடராஜனின் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டதும் சசிகலா ஜாமீனில் அனுப்பப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை