மதிப்பெண் உயர்த்தப்பட்டவர்களை நீக்கிவிட்டு தரவரிசை பட்டியல் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மதிப்பெண் உயர்த்தப்பட்டவர்களை நீக்கிவிட்டு தரவரிசை பட்டியல் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:   பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணிக்கான தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இத்தேர்வில் நடந்த முறைகேடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கண்டுபிடித்து விட்டது.

ஒட்டுமொத்தமாக தேர்வு எழுதிய 1. 33 லட்சம் மாணவர்களில் 196 மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டுமே திருத்தப்பட்டிருந்தன.   இதைத் தவிர வேறு முறைகேடுகள் நடக்காத நிலையில், மோசடி செய்தவர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்து விட்டு, தகுதியானவர்களை நியமிப்பது தான் நியதி. ஆனால், ஒட்டுமொத்த தேர்வையும் ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்து விட்டது.

இதுமுறையல்ல என்றும், அனைத்து விடைத்தாள்களையும் 12 வாரங்களில் மறு மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்றும் மதுரை உயர்நீதிமன்றம் ஆணையிட்டது.
 அதன்பின் 25 நாட்களாகி விட்ட நிலையில், அதை செயல்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமும் இன்று வரை மேற்கொள்ளவில்லை.

மாறாக, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 4ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் தமிழக அரசு செயல்படுவது  எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.

இது தகுதியான மாணவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். விடைத்தாள்களை திருத்துவதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்ததா? என்றால் அதுவும் இல்லை.

அனைத்து விடைத்தாள்களும் முறையாக திருத்தப்பட்டுள்ளன. அவ்வாறு திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண்களை பட்டியலிடும் போது 196 மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்த்தி பதிவு செய்யப்பட்டுள்ளன.   இவர்கள் ஒவ்வொருவருக்கும் 50 முதல் 100 மதிப்பெண்கள் வரை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளன.

மதிப்பெண் உயர்த்தப்பட்ட 196 பேர் யார் என்பதும் அடையாளம் கண்டறியப்பட்டு விட்டது. அவர்களை நீக்கி விட்டு, மீதமுள்ளவர்களைக் கொண்டு தரவரிசை தயாரித்து  அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு வேலை வழங்குவது தான் நியாயமானதாகும்.   இத்தேர்வுக்காக இரவு பகலாக படித்து நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவர்.

இப்படி ஓர் அநீதிக்கு தமிழக அரசு துணை போகக்கூடாது. எனவே, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற வேண்டும்.   உயர்நீதிமன்றம் ஆணையிட்டவாறு விடைத்தாள்களை மறு மதிப்பீடு செய்து புதிய தரவரிசைப் பட்டியல் தயாரித்து, அதில் முன்னணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

.

மூலக்கதை