தமிழகத்தில் எந்த காலத்திலும் பாஜ ஆட்சிக்கு வர முடியாது: வைகோ பேட்டி
வேலூர்: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேலூரில் அளித்த பேட்டி:காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வாய்ப்பில்லை. எக்காரணத்தை கொண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்பதற்கேற்பவே மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறும் தமிழிசை சவுந்தரராஜன், எந்த உலகத்தில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன். அத்வானியை மோடி தொடர்ந்து அவமதித்து வருகிறார்.
இதனால் பாஜவுக்குள்ளேயே புகைச்சல் உள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
தெலுங்குதேசம் வெளியேறியதால், 37 அதிமுக எம்பிக்கள் ஆதரவில் ஆட்சி தொடரலாம். இதனால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
அதனால் முதல்வருக்கு நான் சொல்வது, இப்படி ஒரு சந்தர்ப்பம் நமக்கு வாய்க்காது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்தான் ஆதரவு என்று நிபந்தனை விதியுங்கள்.
இனி நீங்கள் மீண்டும் முதல்வராக முடியாது. இருக்கும் காலத்தில் தமிழகத்திற்கு நல்லது செய்துவிட்டு போகலாமே.
அனைத்துக் கட்சி கூட்டத்தில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் பிரதமரை சந்திக்க அனுமதி கொடுக்கவில்லை. பிரதமர் மோடி ஏழரை கோடி தமிழக மக்களை சந்திக்க அனுமதி கொடுக்காமல் துச்சமென நினைத்துவிட்டார். வாக்குச்சீட்டு முறை வரவேற்கக்கூடியதுதான்.
அமெரிக்காவிலும் வாக்குச்சீட்டு முறைதான் உள்ளது. எலக்ட்ரானிக் மெஷின் மீது ஐயம் உள்ளதால், தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர காங்கிரஸ் தீர்மானம் போட்டுள்ளது.
எந்த காலத்திலும் பாஜ ஆட்சி தமிழகத்தில் வராது.
இவ்வாறு அவர் கூறினார்.
.