வீட்டுக்கடனை அடைக்க இது ஏற்ற நேரமா?
முன்னணி வங்கிகள் மற்றும் வீட்டுக்கடன் நிறுவனங்கள் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்த துவங்கி இருக்கின்றன.
பொதுவாக கடனுக்கான வட்டி விகிதம் உயரும் சூழலில், கடனை முன்கூட்டியே அடைப்பது சரியாக இருக்குமா எனும் கேள்வியை எழுப்பும். பலரது மனதில் இப்போதும் இந்த கேள்வி எழுந்திருக்கலாம். வீட்டுக்கடனை முன்கூட்டியே அடைப்பது தொடர்பான முடிவு எடுக்கும் போது, அந்த தொகையை வேறு வழிகளில் முதலீடு செய்வது வட்டி சேமிப்பை விட அதிக பலன் தருமா... என பரிசீலித்து பார்க்க வேண்டும்.
தற்போதைய சூழலில், பங்குச்சந்தை ஏற்ற இறக்கமான போக்கில் இருக்கிறது. வைப்பு நிதி பலன், வரிக்குபின் லாபம் அளிப்பதாக இல்லை. கடன்சார் முதலீடுகளின் பலனும் குறைந்திருக்கிறது. எனவே வாய்ப்புள்ளவர்கள் கடனுக்கான ஒரு தொகையை முழுவதும் அல்லது ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்துவது பொருத்தமாக இருக்கும். நீண்ட கால கடனை முன்கூட்டியே அடைப்பதில் பல சாதகங்கள் இருக்கின்றன.
அதிக கால கடன் என்றால், நாம் செலுத்தும் வட்டியும் அதிகமாக இருக்கும். மேலும் கடனுக்கான வரிச்சலுகை கழிவில், ஆண்டுக்கு, 2 லட்சம் ரூபாய் என்பதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் எல்லாருக்கும் இது சாத்தியமாகாது. முன்கூட்டியே கடன் தொகையை செலுத்த முடியாதவர்கள் கடனுக்கான மாதத்தவணையை அதிகரிப்பதன் மூலம் கடனை முன்கூட்டியே அடைக்க திட்டமிடலாம்.