மத்திய அரசு மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம்: தெலுங்கு தேசம் கொண்டு வருகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
மத்திய அரசு மீது இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம்: தெலுங்கு தேசம் கொண்டு வருகிறது

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற மற்றும் ஆந்திர சட்டமன்ற தேர்தலின்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசமும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது. எனினும், தேர்தலுக்கு பிறகு இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவு சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆந்திர மாநிலம் ஆந்திரா, தெலுங்கானா என 2 ஆக பிரிக்கப்பட்ட பிறகு தலைநகர் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்துக்கு சென்றுவிட்டது.

இதனால் புதிய தலைநகரை நிர்மாணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தள்ளப்பட்டார். மேலும் ஆந்திராவுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் தனது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கவேண்டும் என்றும் புதிய தலைநகரான அமராவதிவை கட்டுவதற்கு கூடுதல் நிதி வழங்கவேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தார். ஆனால் மத்திய அரசு போதிய நிதி அளிக்கவில்லை.

ஆந்திராவுக்கு  சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த தெலுங்கு தேசம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு எதிராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வருகின்றன. இதற்காக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடன் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. முன்னதாக, மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடந்தபோது அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அது;கைவிடப்பட்டது.

மக்களவையில் இப்போது 539 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் ஆளும் பாஜகவுக்கு மட்டும் 274 எம்.பி.க்கள் உள்ளனர். இது பெரும்பான்மைக்குத் தேவையான 
எம்.பி.க்களைவிட அதிகமாகும். மேலும், சில கூட்டணிக் கட்சிகளும் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடையவே;வாய்ப்பு உள்ளது. எனினும், தொடக்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இடைத்தேர்தல் தோல்விகளால் ஒரு சில எம்.பி.க்களை இழந்தது. இப்போது, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் இணைந்திருப்பது, மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளநிலையில் பாஜகவுக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

 

மூலக்கதை