பழைய ரூபாய் நோட்டுகளின் கதி? ரிசர்வ் வங்கி விளக்கம்

தினமலர்  தினமலர்
பழைய ரூபாய் நோட்டுகளின் கதி? ரிசர்வ் வங்கி விளக்கம்

புதுடில்லி: பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த, 2016, நவ., 8ம் தேதி, செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. செல்லாத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், வங்கிகளில், 'டிபாசிட்' செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி, பழைய ரூபாய் நோட்டுகளை, வங்கிகள், ரிசர்வ் வங்கியில் மக்கள், 'டிபாசிட்' செய்தனர்.

இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ரிசர்வ் வங்கி அளித்த பதில் விபரம்: வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்ட செல்லாத, பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள், சரிபார்க்கும் பணிகள் முடிந்த பின், இயந்திரங்கள் மூலம், சிறு துண்டுகளாக்கப்படுகின்றன.

அதன் பின், அந்த துண்டுகள், இயந்திரம் மூலம், பலம் வாய்ந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு, கட்டிகளாக்கப்படுகின்றன. அதன் பின், அவை அனைத்தும், ஏலம் விடப்பட்டு அகற்றப்படுகின்றன. பழைய ரூபாய் நோட்டுகள், மறு சுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இந்த நோட்டுகளை சரிபார்க்கும் பணிகளில், 59 அதிநவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

மூலக்கதை