பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் பங்கு வெளியீட்டு விலை நிர்ணயம்
மும்பை : பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்க உள்ளது. இவ்வெளியீடு, 20ல் துவங்கி, 22ம் தேதி முடிவடைகிறது. பங்கு ஒன்றின் குறைந்தபட்ச விலை, 60 ரூபாய்; அதிகபட்ச விலை, 63 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக, 33.5 கோடி ரூபாய் திரட்ட முடிவு செய்துள்ளது. பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, பன்டோமத் கேப்பிடல் அட்வைசர்ஸ் நிறுவனம் நிர்வகிக்கிறது.‘பங்கு வெளியீட்டில் திரட்டப்படும் நிதியில், 5 கோடி ரூபாய், துணை நிறுவனத்தின், சூரிய சக்தி வர்த்தகத்திற்கும்; மீதமுள்ள நிதி, நிறுவன நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படும்’ என, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையின், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான பிரிவில் பட்டியலிடப்படும். பெனாரா பேரிங்ஸ் அண்டு பிஸ்டன்ஸ் நிறுவனம், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, உ.பி., மாநிலம், ஆக்ராவில், இரு தொழிற்சாலைகள் உள்ளன.