‘என் மகள் தான், ‘ஆர்ஜியோ’ உருவாக காரணம்’
லண்டன் : ‘‘என் மகள் இஷா தான், ‘ஆர்ஜியோ’ நிறுவனம் உருவாக காரணம்,’’ என, ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி, பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
லண்டனில், ‘பைனான்சியல் டைம்ஸ் ஆர்சிலர் மிட்டல் போல்டுனஸ்’ அமைப்பின், ‘மாற்றத்திற்கு வித்திட்டோர்’ விருது, முகேஷ் அம்பானிக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில், அவர் பேசியதாவது: ரிலையன்ஸ் குழுமம், 2016ல், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மூலம், 3,100 கோடி டாலர் முதலீட்டில், தொலை தொடர்பு சேவையில் நுழைந்தது. இரண்டே ஆண்டுகளில், இத்துறையில், நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில், மொபைல் போனில் படங்கள், செய்திகள் உள்ளிட்ட, ‘டேட்டா’ எனப்படும் தரவுகளை பயன்படுத்துவதில், 155வது இடத்தில் இருந்த இந்தியா, ஆர்ஜியோ வருகையால், தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகிலேயே, ‘4ஜி எல்.டி.இ.,’ தொழில்நுட்பத்தில், டேட்டா சேவையை மிகப் பெரிய அளவில் வழங்கும், ஒரே நிறுவனம் என்ற சிறப்பை, ஆர்ஜியோ பெற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.இதற்கு, என் பிள்ளைகள், இஷாவும், ஆகாஷும் தான் காரணம். அமெரிக்க யேல் பல்கலை மாணவியான, இஷா, 2011ல், விடுமுறையில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது அவர், பல்கலையில் ஒரு செயல் திட்டத்தை சமர்ப்பிக்க, வீட்டின் இணைய வசதியை பயன்படுத்தினார். அதன் செயல்பாட்டில் அவருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டது; அதை என்னிடம் தெரிவித்தார். அப்போது ஆகாஷ், ‘தொலை தொடர்பு என்றாலே குரல் வழிச் சேவை என்பது பழைய காலம். இனி, அனைத்து சேவைகளும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தான் நடக்கும்’ என்றார்.
இந்த உரையாடல்கள் என்னை யோசிக்க வைத்தன. அதன் விளைவாக உருவானது தான், ஆர்ஜியோ நிறுவனம். இவ்வாறு அவர் கூறினார்.