இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடலில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவி

தினகரன்  தினகரன்

கொழும்பு: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் உடலில் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி அவர்களின் திறன் மற்றும் உடல்தகுதியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகிறது. ஸ்பெயினின் பார்சிலோனா கால்பந்து அணி வீரர்களுக்காக செய்யப்பட்ட இந்த அதிநவீன முறை, இப்போது இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்காக செய்யப்பட்டுள்ளது. இதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் 75 ஆயிரம் அமெரிக்க டாலரை செலவு செய்துள்ளது. 2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்காக அணியைத் தயார் செய்யும் விதமாக ஏராளமான தொழில்நுட்பங்களையும், நவீன முறைகளையும் பயன்படுத்தி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வீரர்களின் உடலில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த ஜிபிஎஸ் கருவி மூலம் வீரர்களின் திறனை சிறப்பாக கண்டறிய முடியும். தற்போது நடந்துவரும் முத்தரப்பு டி20 போட்டிகளிலேயே இந்த முறையை செயல்படுத்த தொடங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஜிபிஎஸ் கருவி இலங்கை வீரர்களின் முதுகுப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதில் இருந்து நீலம் மற்றும் பச்சை நிறத்தில் ஒளி மின்னும் என்றும் இதன் மூலம் வீரர்களின் உடல்தகுதி, திறனை ஓய்வறையில் இருந்தே பயிற்சியாளர் கண்காணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் களத்தில் இருக்கும் போது, எத்தனை மீட்டர் ஓடினார்கள், பந்துகளை எப்படி வீசினார்கள், பீல்டிங் செய்யும் போது எப்படி செயல்பட்டார்கள் போன்றவற்றை கண்காணிக்கும் விதமாக இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பீல்டிங் பயிற்சியாளர் நிக் போத்தாஸ் இந்த தொழில்நுட்பத்தை இலங்கை அணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

மூலக்கதை