ஆட்டம் காட்டும் அதிபர் டொனால்டு டிரம்ப் :இந்தியாவின் ஏற்றுமதி மானியத்தால் பாதிப்பு:உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்கா புகார்
வாஷிங்டன்:இந்தியாவின் ஏற்றுமதி மானிய திட்டங்களால், தங்கள் நாட்டு தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக, உலக வர்த்தக அமைப்பிடம், அமெரிக்கா முறையிட்டு உள்ளது.இது குறித்து, உலக வர்த்தக அமைப்பிடம், அமெரிக்க வர்த்தகத் துறை பிரதிநிதி, லைட்திசர் அளித்துள்ள மனு:இந்தியா, குறைந்தபட்சம் ஆறு திட்டங்களின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு, அதிக மானியம், வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது.
உருக்கு பொருட்கள், மருந்து, ரசாயனம், ஜவுளி, ஆயத்த ஆடை, தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்டவற்றை, ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்த வகையில், ஆண்டுக்கு, 700 கோடி டாலருக்கும் அதிகமான சலுகைகளை, இந்திய நிறுவனங்கள் பெறுகின்றன. அதனால், இந்தியாவால், அமெரிக்காவிற்கு, குறைந்த விலையில் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடிகிறது.
இது, அமெரிக்க நிறுவனங்களையும், அவற்றை சார்ந்துள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.ஏற்றுமதி நாடுகளின் மானியங்கள், இறக்குமதி செய்யும் நாடுகளை பாதிக்காத வகையில், நியாயமாகவும், பரஸ்பரம் சமமாகவும் இருக்க வேண்டும்.எனினும் இதில், வளரும் நாடுகள் சிலவற்றுக்கு, தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அந்த நாடுகள், குறிப்பிட்ட பொருளாதார குறியீட்டை எட்டும் வரை, சற்றுதாராளமாக மானியம் வழங்கலாம்.துவக்கத்தில், இந்த பிரிவில் இருந்த இந்தியா, நிர்ணயிக்கப்பட்ட பொருளாதார குறியீட்டை, 2015ல் தாண்டியது.
இதையடுத்து, மானிய வரம்பிற்கு அளிக்கப்பட்ட விலக்கும், தானாகவே காலாவதியாகி விட்டது.இருந்த போதிலும், இந்தியா இன்னும் ஏற்றுமதி மானியங்களை திரும்பப் பெறாமல் உள்ளது.அதுமட்டுமின்றி, மானியங்களை மேலும் விரிவுபடுத்தி உள்ளது.
உதாரணமாக, எம்.இ.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், ஏற்றுமதி மானியத்திற்கு தகுதி உள்ள பொருட்களின் எண்ணிக்கையை, இரு மடங்கு உயர்த்தி, 8,000 ஆக அதிகரித்து உள்ளது.சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி, 2,000 சதவீதத்தில் இருந்து, 2017ல், 6,000 சதவீதமாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிற்கான, இந்தியாவின் ஏற்றுமதியில், இந்த மண்டலங்களின் பங்கு, 30 சதவீதமாக உள்ளது.
அதுபோல, இ.ஓ.யு.எஸ்., இ.எச்.டி.பி.எஸ்., உள்ளிட்ட மானிய திட்டங்களும், குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளன. அதனால், இந்தியா, ஏற்றுமதி மானியங்களை நீக்க வேண்டும்.உலக வர்த்தக அமைப்பு விதிகளின்படி, இப்பிரச்னையில், இந்தியாவும், அமெரிக்காவும், முதலில் பேச்சு நடத்தும். அதில் தீர்வு காணாவிட்டால், உலக வர்த்தக அமைப்பின் குறை தீர்ப்பாயத்தில், அமெரிக்கா முறையிடும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விசா கட்டுப்பாடு, உருக்கு, அலுமினியம் இறக்குமதி வரி உயர்வு ஆகியவற்றுடன், தற்போது, மானிய பிரச்னையை, அதிபர் டிரம்ப் கிளப்பி இருப்பது, இந்தியாவிற்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.
பயணம்அமெரிக்கா கிளப்பியுள்ள மானிய விவகாரம் குறித்து, அந்நாட்டு வர்த்தக பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த, இந்திய வெளியுறவுத் துறை செயலர், விஜய் கோகலே, வாஷிங்டன் சென்று உள்ளார்.