பாகிஸ்தான் தூதரக ஊழியர்களால் அவமானம் :இம்ரான் தாஹிர் குற்றச்சாட்டு
லண்டன்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் பாகிஸ்தானில் பிறந்தவர். பாகிஸ்தானில் அடுத்த வாரம் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ள உலக லெவன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
இதற்கான விசாவை பெறுவதற்காக, இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு சென்றபோது, அங்குள்ள ஊழியர்கள் தன்னை அவமானப்படுத்தியதாக இம்ரான் தாஹிர் குற்றம் சாட்டியுள்ளார். ‘’விசாக்களை பெறுவதற்காக எனது குடும்ப உறுப்பினர்களுடன் பாகிஸ்தான் தூதரகம் சென்றேன்.
5 மணி நேரம் காத்திருந்த பின்பு, அலுவலக நேரம் முடிந்து விட்டதாக கூறி, அங்குள்ள ஊழியர்களால் வெளியேற்றப்பட்டேன்.
அதன்பின் உயர் கமிஷனர் சையத் இபின் அப்பாஸ் தலையிட்டு உதவி செய்தார்.
அவருக்கு பாராட்டுக்கள். ஆனால் இந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது’’ என இம்ரான் தாஹிர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்காக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அஸ்ஸான் இக்பால் மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.