‘எனக்கு நிறுவனம் தான் கோவில்’ : எல் அண்டு டி தலைவர் ஏ.எம்.நாயக் உருக்கம்
மும்பை : ‘‘எனக்கு, நிறுவனம் தான் கோவில்,’’ என, எல் அண்டு டி குழுமத்தின் செயல் தலைவர், ஏ.எம்.நாயக் தெரிவித்துள்ளார்.
எல் அண்டு டி என, சுருக்கமாக அழைக்கப்படும், லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனத்தின், 72வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், மும்பையில் நடைபெற்றது. இதில், எல் அண்டு டி குழுமத்தில், 53 ஆண்டுகள் பணியாற்றி, குழுமத்தின் செயல் தலைவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறும், ஏ.எம்.நாயக் பேசியதாவது:கடந்த, 1965ல், எல் அண்டு டி குழுமத்தில், சாதாரண பயிற்சியாளராக சேர்ந்த நான், 53 ஆண்டுகளை கடந்து வந்துள்ளேன். அதில், 18 ஆண்டுகள், நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றதில் பெருமை கொள்கிறேன். அணுசக்தி, விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பிரிவுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை, எல் அண்டு டி வழங்கி வருகிறது.
‘ஆகாஷ், பிரித்வி, பிரம்மோஸ், ரோகிணி, சந்திரயான், மங்கள்யான்’ உள்ளிட்டவற்றின் வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் பங்கு கொண்டுள்ளது.என் தந்தை, சுதந்திர போராட்ட வீரர்; கிராமப்புற மக்கள் மேன்மைக்காக பாடுபட்டவர். அவர் தான், எனக்கு வழிகாட்டி. அவரை போல, நானும், எல் அண்டு டி மூலம், தேச முன்னேற்றத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
கடந்த, 1999 – 2017 வரையிலான காலத்தில், எல் அண்டு டி குழுமத்தின் வருவாய், 5,000 கோடி ரூபாயில் இருந்து, 1.20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.எனக்கு பின், செயல் தலைவர் பொறுப்பு ஏற்க, எஸ்.என்.சுப்ரமணியன் தான் தகுதியானவர் என, 2014ல் தெரிவித்தேன். அதன்படி, அவர், தற்போது பொறுப்பேற்று உள்ளார். ஒவ்வொருவரும், தான் பணியாற்றும் நிறுவனத்தை கோவிலாக கருதி, அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டால், உயர்வடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.