வசதியானோர் திரும்ப தராத கடன்: எஸ்.பி.ஐ., முதலிடம்
புதுடில்லி : வசதி இருந்தும், கடனை திரும்பச் செலுத்தாமல் உள்ள வாடிக்கையாளர்கள் கணக்கில், எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 27 சதவீத பங்குடன், முதலிடத்தில் உள்ளது.
மத்திய நிதியமைச்சகம், பொதுத் துறை வங்கிகளில், வசதி இருந்தும் கடனை திரும்ப அளிக்காதவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, வசதி இருந்தும் கடனை திரும்பத் தராத, 1,762 வாடிக்கையாளர்களின் கணக்குகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு, 25,104 கோடி ரூபாய் வர வேண்டியுள்ளது. இப்பிரிவில், இவ்வங்கி, 27 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதே பிரிவில், பஞ்சாப் நேஷனல் வங்கி, 1,120 கடன்தாரர்களிடம் இருந்து, 12,278 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், வசதி இருந்தும் கடனை திரும்பத் தராதோர் பிரிவில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மொத்தம், 92,376 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இதில், எஸ்.பி.ஐ., மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு வர வேண்டிய தொகை மட்டும், 40 சதவீதம்; அதாவது, 37,382 கோடி ரூபாய் ஆகும்.
வசதி இருந்தும் கடனை திரும்பத் தராதோர் கணக்கின் கீழ், 2015 – 16ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளுக்கு வர வேண்டிய தொகை, 76,685 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2016 – 17ம் நிதியாண்டில், 20.4 சதவீதம் உயர்ந்து, 92,376 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
20 வங்கிகளின் நிலுவை:
ஜூன் இறுதி நிலவரப்படி, எஸ்.பி.ஐ., உள்ளிட்ட, 18 பொதுத் துறை வங்கிகள்; தனியார் துறையைச் சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் வாராக்கடன், 8,29,338 கோடி ரூபாயாக உள்ளது. இதில், எஸ்.பி.ஐ., 22.7 சதவீதம், அதாவது, 1,88,068 கோடி ரூபாய் வாராக்கடனுடன், முதலிடத்தில் உள்ளது.