இந்தோனேஷியாவிடம் மன்னிப்பு கோரிய மலேஷியா

தினமலர்  தினமலர்

கோலாலம்பூர்: இந்தோனேஷியாவின் தேசியக் கொடியை தவறாக அச்சிட்டதற்காக, மலேஷியா மன்னிப்பு கோரியுள்ளது. மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம், தென் கிழக்காசிய நாடுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. இதில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களுக்கு, வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. அதில், போட்டியில் பங்கேற்றுள்ள, 11 நாடுகளின் தேசியக் கொடிகள் மற்றும் வீரர்களின் விபரங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள், அந்த கையேட்டில் இருந்த, தங்கள் நாட்டுக் கொடியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர். கொடியின் மேல் பகுதியில், சிவப்பு நிறத்துக்கு பதிலாக வெள்ளை நிறமும், கீழ் பகுதியில், வெள்ளை நிறத்துக்கு பதிலாக சிவப்பு நிறமும் தவறாக அச்சிடப்பட்டிருந்தது.
ஐரோப்பிய நாடான போலந்தின் தேசியக் கொடியில் தான், மேல் பகுதியில் வெள்ளை நிறமும், கீழ் பகுதியில் சிவப்பு நிறமும் இருக்கும். தவறாக அச்சிடப்பட்ட கொடியைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்த இந்தோனேஷியர்கள், மலேஷிய அரசை, சமூக வலைதளங்களில் கடுமையாக வசை பாடினர்.
இதையடுத்து, மலேஷிய விளையாட்டுத் துறை அமைச்சர், கைரி ஜமாலுதீன், இந்தோனேஷிய அமைச்சர் இமாம் நஹ்ரவியை நேற்று நேரில் சந்தித்து, ''கொடி தவறாக அச்சிடப்பட்டதில் உள்நோக்கம் இல்லை. எனினும், இந்தோனேஷிய மக்களின் மனங்களை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறோம்,'' என்றார்.

மூலக்கதை