ரோட்டில் சென்றவர்கள் மீது தீவிரவாதி கத்தியால் குத்தியதில் 8 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்

மாஸ்கோ : ரஷ்யாவின் சர்கத் நகரில் தீவிரவாதி கத்தியால் குத்தியதில் ரோட்டில் சென்ற பொதுமக்கள் 8 பேர் காயம் அடைந்தனர். அவரை போலீசார் சுட்டு பிடித்தனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,100 கி.மீ தூரத்தில் உள்ளது சர்கத் நகரம். இங்கு நேற்று காலை தீவிரவாதி  ஒருவன் ரோட்டில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது திடீரென கத்தியால் குத்தினார். இதில் 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கத்தியால் குத்திய தீவிரவாதியை துப்பாக்கியால் சுட்டு மடக்கினர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.பின்லாந்திலும் கத்தி குத்தில் 2 பேர் பலி: பின்லாந்தின் துர்கு நகரில் உள்ள மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை ஒருவர் கத்தி குத்து தாக்குதலில் ஈடுபட்டார். இதில் 2 பேர் பலியாயினர், 8 பேர் காயம் அடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் கத்தியால் குத்திய  மர்ம நபரை துப்பாக்கியால் சுட்டு மடக்கினர். அவர் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 18 வயது வாலிபர் என தெரிய வந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த மேலும் 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மூலக்கதை