சியரா லியோன் நாட்டில் நிலச்சரிவு: பலி 400 ஆக உயர்வு
ஜெனிவா : சியரா லியோன் நாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியாேனார் எண்ணிக்கை 400 ஆக அதிகரித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவின் சியரா லியோன் நாட்டில் கடந்த 14ம் தேதி கனமழை பெய்தது. இதனால் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, தலைநகர் பிரிடவுன் புறநகர் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். நிலச்சரிவில் சிக்கி 400 பேர் பலியாகி உள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் எல்கட்ஜ் அஷ் சே நேற்று ஜெனிவாவில் அளித்த பேட்டியில், ‘‘நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. 600க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர். நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் பலர் முகாமுக்கு வெளியே தூங்கும் நிலை உள்ளது’’ என்றார்.