தாதா போட்டியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: திருவள்ளூர் அருகே பயங்கரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாதா போட்டியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: திருவள்ளூர் அருகே பயங்கரம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தாதா போட்டியில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம் கலெக்டர் நகர் பெரியார் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் பிரபு (22), எலக்ட்ரிஷியன் வேலை செய்து வந்தார்.

வேலை இல்லாத நாட்களில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சுற்றி வந்துள்ளார்.   நேற்றுரவு 9. 30 மணியளவில் மழை பெய்தபோது, பிரபு வீட்டிற்குள் இருந்தார். அந்த நேரத்தில், இவரது வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள், பிரபுவை வெளியே அழைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு பிரபுவும் வெளியே வந்துள்ளார். பிரபுவிடம் பேச்சு கொடுப்பது போன்று மர்ம ஆசாமிகள், மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினர்.

உருட்டு கட்டைகளாலும் சரமாரியாக தாக்கினர்.

இதில், பிரபுவுக்கு தொண்டை, அடிவயிறு ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து விழுந்தது.

ரத்தம் பீறிட்டதால் சம்பவ இடத்திலேயே பிரபு துடிதுடித்து இறந்தார். சத்தம் கேட்டு வீட்டில் இருந்த பெற்றோர் ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி விட்டனர்.

தகவலறிந்து வெள்ளவேடு இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ். பி. , சிபிசக்கரவர்த்தி, டிஎஸ்பி புகழேந்தி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

மோப்ப நாய் ரேம்போ வரவைக்கப்பட்டு, சிறிது தூரம் ஓடி நின்று விட்டது.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ‘கூடப்பாக்கம் கலெக்டர் நகரில், ‘யார் தாதா’ என்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த கொலை நடந்துள்ளதாக தெரிகிறது.

இதுசம்பந்தமாக இதே பகுதியை சேர்ந்த பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம், திருவள்ளூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை