பர்சிலோனா தாக்குதல்! - இருளில் மூழ்கிய ஈபிள் கோபுரம்!!
நேற்றைய தினம் ஸ்பெயினின் பர்சிலோனா நகரில் இடம்பெற்ற தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டும், 50 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து இருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்த தாக்குதலில் பாதிக்கப்படவர்களுக்கு ஆதரவு அளிக்கும் முகமாக ஈஃபிள் கோபுரம் தன் விளக்குகளை அணைத்து இருளில் மூழ்கியது.
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ நேற்று வியாழக்கிழமை இரவு தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். 'பர்சிலோனா தாக்குதலில் பலியான உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக, பரிஸ் நகரம் ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகளை 12.45 மணி முதல் அணைக்க உள்ளது!' என தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12.45 மணிக்கு விளக்குகள் யாவும் அணைக்கப்பட்டு, ஈஃபிள் கோபுரம் இருளில் மூழ்கியது.
அதேவேளை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனும் தனது இரங்கல்களை அவரது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார். 'என்னுடைய எல்லா எண்ணங்களும் என் பர்சிலோனா மக்கள் சார்ந்தே இருக்கிறது. அவர்களுக்கு என் இரங்கல்கள்!' என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.