திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்

ஊத்துக்கோட்டை: தோழிகளுக்கு திருமண பத்திரிகை கொடுக்க சென்றபோது விபத்தில் சிக்கி மணப்பெண் உயிரிழந்தார். திருமணம் நடக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இது நடந்துள்ளதால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே வேலகாபுரம் மேட்டுக்காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகள் தனலட்சுமி (24).

இவர் பெரியபாளையம் அருகே எர்ணாகுப்பம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.   இவருக்கும், ஊத்துக்கோட்டை அருகே காசிரெட்டிபேட்டையை சேர்ந்த  ராஜேந்திரனின் மகன் மார்ட்டினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதன்படி இவர்களுக்கு வரும் 23ம் தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள  மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

இதையடுத்து உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண பத்திரிகையை பெற்றோரும் மணப்பெண் தனலட்சுமியும் கொடுத்துவந்தனர்.

இன்று காலை தனது தோழிகளுக்கு பத்திரிகை வைப்பதற்காக உறவினர் ஒருவரின் பைக்கில் தனலட்சுமி எர்ணாகுப்பத்துக்கு சென்றார். எர்ணாகுப்பம் அருகே வந்தபோது பெரிய பாளையத்தில் இருந்து தாமரைப்பாக்கம்  நோக்கி சென்ற லாரி, அவர்களது பைக் மீது மோதியது.

இதில் பைக்குடன் தூக்கி வீசப்பட்டதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த உறவினர் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிவிட்ட லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

திருமணம் நடக்க இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சாலை விபத்தில் மணப்பெண் பலியானது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை