நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கலாம்; மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

PARIS TAMIL  PARIS TAMIL
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கலாம்; மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல்

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவின் வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை திங்கட்கிழமை அன்று சந்தித்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் அவசர சட்டத்தின் வரைவு சட்ட அமைச்சகம், சுகாதாரம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தமிழக அரசின் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கலாம் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

அரசியல் சட்டத்தில் ‘கல்வி’ பொது பட்டியலில் வருவதால் மாநில அரசுக்கும் கல்வி தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்க அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று அட்டார்னி ஜெனரல் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அட்டார்னி ஜெனரல் அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு நேற்று இரவு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களும் தமிழக அரசின் நீட் தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கின.

ஒரேநாளில் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. அடுத்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் சில மூத்த அதிகாரிகள் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு சென்று மூத்த அதிகாரிகளை சந்தித்து அவசர சட்டம் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்து வருகின்றனர்.

அவசர சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும்.

இதன் பிறகு அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பு தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகும்.

 

மூலக்கதை