இதயத்தில் குத்திய ஆணியுடன் மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்ற நபர்!

PARIS TAMIL  PARIS TAMIL
இதயத்தில் குத்திய ஆணியுடன் மருத்துவமனைக்கு காரை ஓட்டி சென்ற நபர்!

அமெரிக்காவில் இதயத்தில் குத்திய ஆணியை அகற்றாமல் சுமார் 20 கிலோ மீற்றர் தூரம் காரை ஓட்டிச் சென்று நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்ந்து தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
 
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்தவர் 52 வயதாகும் டாக் பெர்க்சன். இவர் தனது வீட்டில் மரவேலைகள் செய்து கொண்டிருந்த போது, தவறுதலாக ஆணி அடிக்கும் எந்திரத்திலிருந்து, ஒரு ஆணி இவரின் மார்பில் பாய்ந்துள்ளது.
 
ஆணி மிக ஆழமாகச் சென்று இதயத்தில் பாய்ந்திருப்பதை உணர்ந்த அவர், அந்த ஆணியைப் பிடுங்காமல் தனது காரை 20 கிலோ மீற்றர் ஓட்டிச் சென்று மருத்துவமனையை அடைந்துள்ளார். அதன் பிறகே தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
 
மருத்துவர்கள் அவரை உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து, அறுவை சிகிச்சை மூலம் ஆணியை எடுத்து, காயத்தையும் சரி செய்துள்ளனர்.
 
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும் போது, இதயத்தின் முக்கியமான பகுதிக்கு மிக அருகில் ஆணி குத்தி இருந்தது. இன்னும் சற்று ஆழமாக குத்தி இருந்தால், அவரின் உயிரை காப்பாற்றி இருக்க முடியாது. டாக் தனது புத்திசாலித்தனம் மற்றும் சமயோசிதத்தால் தனது உயிரை தானே காப்பாற்றியுள்ளார் என்று கூறினர்.
 
மறைந்த பிரபல டிஸ்கவரி சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளரும், உயிரியல் வல்லுநருமான ஸ்டீவ் இர்வின், கடல் உயிரினங்கள் ஆய்வின் போது திருக்கை மீன் தனது வாலில் உள்ள கூரான எலும்பால் அவரது மார்பில் தாக்கியது.
 
அது அவரது இதயத்தில் குத்தியது. மருத்துவர்கள் உதவி இன்றி அவரே அதை பிடுங்கியதால் மரணமடைந்தார். ஆனால் டாக் பெர்க்சன், புத்திசாலித்தனமாக மருத்துவமனைக்குச் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.
 

மூலக்கதை