கோஹ்லி - மித்தாலி கூட்டணியில் காக்டெயில் கிரிக்கெட் கண்டுகளிக்க ரெடியா?

தினகரன்  தினகரன்

புதுமை எப்போதுமே வரவேற்கத்தக்கதுதான்...! ஆனால், இப்படியும் நடக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு ஒரு விஷயம் நடக்கப்போகிறது. அதுதான் ‘காக்டெயில் கிரிக்கெட்’. இதென்ன வித்தியாசமாக இருக்கேன்னு யோசிக்கிறீங்க, அப்படித்தானே...? நடைமுறைக்கு வந்தால் ரொம்பவே மாறுபட்ட அனுபவமாக இருக்கும்.இங்கிலாந்தில் நடந்து முடிந்த உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரை பார்த்திருப்பீங்க... வழிப்பறி மாதிரி இறுதிப்போட்டியில், இந்திய அணி பரிதாபமாக இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது நினைவிருக்கலாம். இந்தப்போட்டி முடிந்ததும் கேப்டன் மித்தாலி ராஜ் ஒரு கோரிக்கை வைத்தார். ‘எங்களுக்கும் ஐபிஎல் வேண்டும்’ என்று. ஏன் இப்படி ஒரு கோரிக்கை என்கிறீர்களா? அங்கேதான் விஷயமே இருக்கு. இந்திய மகளிர் அணி கடந்த சில ஆண்டுகளை விட தற்போது வலுவாக இருக்கிறது. அனுபவம் + இளமை துடிப்போடு விளையாடி வரும் தற்போதைய அணியில், சில வீராங்கனைகள் போதிய மனதிடமின்றி விளையாடுகின்றனர். சூழலுக்கேற்ற வகையில் தங்களை மாற்றிக்கொண்டு அவர்களால் விளையாட முடிவதில்லை. அந்த அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா போன்றவர்கள், சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த ‘பிக்பாஷ் டி20 மகளிர் லீக்’ போட்டிகளில் பங்கேற்றனர். சிலர் இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி போட்டிகளிலும் பங்கேற்றனர். ஆனால், மற்ற வீராங்கனைகளுக்கு இதுபோன்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த சூழலில்தான் மித்தாலி ராஜ் மகளிர் ஐபிஎல் வேண்டும் என்றார்.இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் நிர்வாகிகள் தரப்பில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது மகளிர் அணி வீராங்கனைகளை மட்டும் கொண்டு, ஐபிஎல் தொடரை நடத்தினால், போதிய வருவாய் கிடைக்குமா? ரசிகர்கள் விரும்புவார்களா? ஸ்பான்சர்ஸ் கிடைப்பாங்களா? என ஏகப்பட்ட கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அப்போது நிர்வாகிகளுள் ஒருவர், ‘‘ஏன்.. பேசாமல் ஆண்கள், பெண்கள் கொண்டு ஒரு கலப்பு அணியை உருவாக்கக்கூடாது?’’ என்றார். இது சாத்தியப்படுமா என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரிடம் ஆலோசிக்கப்பட்டது. ஏன் முடியாது? இந்திய ஆண்கள் அணியின் முக்கிய வீரர்கள் ஏற்கனவே சர்வதேச அட்டவணை, ஐபிஎல் என ஓவர் பிஸி. எனவே, இரண்டாம் கட்ட முக்கிய வீரர்களை கொண்டு 6 : 5 என்ற அளவில் ஆண்கள் : பெண்கள் கொண்ட அணியை உருவாக்கலாம். வீரர்கள், வீராங்கனைகளின் திறமை அடிப்படையில் இந்த விகிதத்தை மாற்றிக்கொள்ளலாம். புதுமையாகவும் இருக்கும். ஐபிஎல் துவக்கத்தில் இப்படித்தான் சில சந்தேகங்கள் கிளம்பின.  இப்போது அந்த தொடர் சிறப்பாக நடக்கிறதே என்றெல்லாம் விவாதிக்கப்பட்டது.போட்டியின்போது ஆண் வீரர்களுக்கு சமமாக பெண்களும் தங்களை விரைவில் பக்குவப்படுத்திக் கொள்ளலாம். ஆட்டமுறை மேம்படும். ரசிகர்களுக்கும் ஒரு மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். டென்னிஸ், பேட்மிண்டன் போட்டிகளில் ஆண் - பெண் கலப்பு இரட்டையர் போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஏன் கிரிக்கெட்டிலும் இந்த முறையை கொண்டு வரக்கூடாது என ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பாக தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அடுத்த ஆண்டில் இருந்து அமல்படுத்தலாம். ஏற்கனவே ஏப்ரல் - மே மாதங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. அதிலிருந்து 4, 5 மாதங்கள் கழித்து செப்டம்பர் - அக்டோபரில், இந்த காக்டெயில் பாணி கிரிக்கெட்டை கொண்டு வரலாம். முழுவதும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மட்டுமே இதில் இடம் பெற முடியும் என கூறப்படுகிறது. இது நடைமுறைக்கு சாத்தியமே இல்லை. மணிக்கு 140 கிமீக்கு மேல் வீசும் ஒரு ஆண் ேவகப்பந்து வீச்சாளரை, ஒரு பெண் பேட்ஸ்மேன் சமாளிக்க முடியுமா? பெண்களை பொறுத்தவரை, அவர்களின் சராசரி வேகமே 125-135 தான். எனவே, அவர்களால் 140 கிமீ வேகத்தை எதிர்கொள்ள முடியுமா என்ற கேள்வி பலமாக எழுந்து நிற்கிறது. வேண்டுமானால் பயிற்சி போட்டிகள் நடத்தி பிறகு, அமல்படுத்தலாம் என்ற ரீதியிலும் பேச்சுகள் தொடர்கின்றன. விரைவில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என இந்திய கிரிக்கெட் தரப்பு தெரிவிக்கிறது.

மூலக்கதை