பாரா தடகளம் தமிழக வீரர்கள் அசத்தல்
மதுரை : உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகள போட்டியில், தமிழகத்தை சேர்ந்த 3 வீரர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். கனடாவில் உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான 7வது சர்வதேச தடகள போட்டிகள், ஆக. 3ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் மதுரையை சேர்ந்த வீரர்கள் மனோஜ், கணேசன் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த செல்வராஜ் ஆகிய தமிழக வீரர்கள் 3 பேர் முதல்முறையாக கலந்து கொண்டனர். நேற்று நடந்த குண்டு எறிதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் மூவரும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். இந்த தொடரில், தமிழக வீரர்களால் மட்டும் இதுவரை இந்தியாவிற்கு 5 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.