மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நடால் அதிர்ச்சி தோல்வி

தினகரன்  தினகரன்

மான்ட்ரியால் : கனடாவில் நடைபெற்று வரும் மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், நட்சத்திர வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வியடைந்தார். கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் (18 வயது, 143வது ரேங்க்) நேற்று மோதிய நடால் (2வது ரேங்க்) 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் உற்சாகமாக விளையாடிய டெனிஸ் ஷபோவலோவ் அடுத்த 2 செட்களையும் 6-4, 7-6 (7-4) என போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.இந்த தொடரில் இன்னும் 2 வெற்றி பெற்றிருந்தால், உலக தரவரிசையில் நடால் மீண்டும் முதல் இடத்துக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருந்த நிலையில், இளம் வீரர் ஷபோவலோவ் அந்த கனவை கலைத்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு 3வது சுற்றில் ஸ்பெயினின் டேவிட் பெர்ரருடன் மோதிய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 4-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிக்கா), ராபின் ஹாஸ் (நெதர்லாந்து), அட்ரியன் மன்னரினோ (பிரான்ஸ்) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

மூலக்கதை