தொடரை இழந்தது இலங்கை!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரை இழந்தது இலங்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
 
முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 304 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், கொழும்புவில் கடந்த 3ம் திகதி தொடங்கியது.
 
முதலில் ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 622 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
 
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இலங்கை அணி 183 ஓட்டங்களுக்குள் சுருண்டு, பாலோ ஆன் ஆனது.
 
439 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணிக்கு துவக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினர்.
 
உபுல் தரங்கா 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன் பின் கருணாரத்னேவுடன் இணைந்த குசால் மெண்டிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
 
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். சிறப்பாக விளையாடி சதமடித்த மெண்டிஸ், 110 ஓட்டங்கள் எடுத்த நிலையில் பாண்ட்யா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு இலங்கை அணி 209 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய இலங்கை அணிக்கு கருணாரத்னே அபாராமாக விளையாடி சதமடித்தார்.
 
ஆனால் இவருக்கு இணையாக ஆடிய புஷ்பகுமாரா அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய சண்டிமால் வந்த வேகத்தில் பெளலியன் திரும்ப , கருணாரத்னேவுடன் ஜோடி சேர்ந்த மேத்யூஸ் விக்கெட் விழாமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
 
கருணாரத்னேவை 141 ஓட்டங்களிலும், மெத்யூசை 36 ஓட்டங்களிலும் ஜடேஜா தன்னுடைய சுழலில் வீழ்த்தினார். அடுத்து வந்த பெரோராவையும் ஜடேஜா விட்டு வைக்கவில்லை. பெரேரா 4 ஓட்டங்களில் வெளியேறினார்.
 
அடுத்த வந்த வீரர்களும் சொதப்ப 386 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
 
இதன்மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தொடரை வென்றுள்ளது.

மூலக்கதை