நடிகையை பலருடன் சேர்த்து ஆபாச படம் எடுக்க திலீப் திட்டமிட்டார் : குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்
திருவனந்தபுரம் : நடிகையை பலருடன் சேர்த்து ஆபாச படம் எடுக்கவும் நடிகர் திலீப் திட்டமிட்டிருந்தார் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பிரபல நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு எதிராக 2 நாட்களுக்கு முன் போலீசார் அங்கமாலி நீதிமன்றத்தில் புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில் மொத்தம் 1,452 பக்கங்களும், 215 சாட்சிகளின் வாக்குமூலங்களும் உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது. இந்த வழக்கு செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ள விவரங்கள் வெளிவர தொடங்கி உள்ளன. இந்த குற்றப்பத்திரிகையில் திலீப்பின் முன்னாள் மனைவி மஞ்சு வாரியாரை போலீசார் சாட்சியாக சேர்த்தது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கில் திலீப்புக்கு எதிராக மஞ்சுவாரியார் சாட்சி சொல்ல நீதிமன்றம் வருவாரா என்பது சந்தேகம்தான்.தனது முதல் திருமணம் விவாகரத்து ஆனதற்கு, கடத்தல் நடிகைதான் முதல் காரணம் என திலீப் கருதியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க முடிவு செய்த திலீப், 4 வருடங்களுக்கு முன்பு இதற்கான சதித்திட்டத்தை தீட்டினார். இருப்பினும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அந்த நடிகையின் தந்தை இறந்த பின்னர் தான் சம்பவத்தை அரங்கேற்ற பல்சர் சுனிலை திலீப் கூடுதலாக வற்புறுத்த தொடங்கியுள்ளார். இதையடுத்து திலீப் தருவதாக கூறிய ரூ.1.5 கோடிக்கு ஆசைப்பட்டு பல்சர் சுனில் நடிகையை கடத்த 5 முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தளங்களில் நடிகையின் தந்தையும் உடன் இருந்ததால் அந்த திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை. நடிகைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த திலீப் திருமணத்தை தடுத்து நிறுத்தவும், நடிகையை கடத்தி ஆபாசபடம் எடுக்கவும் திட்டமிட்டார். ஒரே சமயத்தில் பலருடன் ஆபாசமாக இருப்பது போன்ற காட்சிகளை எடுக்க வேண்டும் என்று பல்சர் சுனிலிடம் திலீப் வற்புறுத்தியுள்ளார் என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.