அரசு விழாவில் பங்கேற்றபோது தேனீக்கள் படையெடுப்பு அமைச்சர் அலறி ஓட்டம்
பெலகாவி : அரசு விழாவின்போது தேனீக்கள் தாக்கியதால் அமைச்சரும், அதிகாரிகளும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கர்நாடகா மாநிலம் பெலகாவியில் பயோபார்க் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ரமாநாத் ராய் கலந்து கொண்டார். விழா தொடங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்தபோது, அருகில் இருந்த மரத்தில் இருந்து தேனீக்கள் திடீரென மேடையை நோக்கி கூட்டமாக வந்தன.தேனீக்களின் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ரமாநாத் ராயும், அரசு அதிகாரிகளும் தப்பித்தால் போதும் என்று அங்கிருந்து அலறியடித்து ஓடத் தொடங்கினர். இதனால், பயோபார்க் திறப்பு விழா நின்றது. இருப்பினும், மேடை அருகே இருந்த 6 பேரை தேனீக்கள் பதம் பார்த்தன. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.