பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்யுங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை அந்த நாட்டு அரசு கடந்த ஜனவரி மாதம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி அவன் விடுதலை செய்யப்பட்டான். ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, மும்பை தாக்குதலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவும் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளது. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்யுங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கையை விடுத்து உள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீத்தர் நாவேர்ட் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “ஹபீஸ் சயீத்தை கைது மற்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கலை பாகிஸ்தான் அரசு உறுதிசெய்ய வேண்டும்,” என கூறிஉள்ளார்.