ரூ.100 கோடி வருவாய் இழந்துமனிதநேய மையம் மூலம் மாணவர்களுக்கு கல்வி சேவை பயிற்சி சைதை துரைசாமி தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
ரூ.100 கோடி வருவாய் இழந்துமனிதநேய மையம் மூலம் மாணவர்களுக்கு கல்வி சேவை பயிற்சி சைதை துரைசாமி தகவல்

சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் திறந்த புத்தகமாகச் செயல்படும் என் மீது, தொடர்ந்து மு.க.ஸ்டாலின் சேற்றை வீசி வருவதால், இந்த அறிக்கை கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டிருக்கிறேன். என் மீது வருமான வரித்துறை சோதனை நடக்கவே இல்லை என்றாலும், நடந்ததாக மீண்டும் மீண்டும் மு.க.ஸ்டாலின் ஊடகங்களிடம் அவதூறு கூறி வருகிறார்.

உண்மைக்குப் புறம்பாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும், இனியும் அவதூறாக பேசவேண்டாம் என்று மு.க.ஸ்டாலினுக்கு மூன்று முறை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால், அதன்பிறகும் வருமானவரி சோதனை நடைபெற்றதாக மு.க.ஸ்டாலின் அவதூறு கூறுவதை கேட்கும்போது, அவர் திட்டமிட்டு என் மீது களங்கம் சுமத்தி வருவது உறுதியாகிறது.

தனிப்பட்ட முறையில் எனக்கு இருக்கும் நற்பெயரையும், மனிதநேயம் அறக்கட்டளை மூலம் சாதி, மத பேதமில்லாமல் தமிழக மாணவர்கள் போட்டித் தேர்வுகள் மூலம் பணி பெறுவதற்கு நான் நடத்திவரும் இலவச கல்வி சேவையையும் களங்கப்படுத்த மு.க.ஸ்டாலின் நினைக்கிறார்.

மாணவப் பருவத்தில் எம்.ஜி.ஆர். புகழ் பரப்புவதற்காக பேனா நண்பர்கள் அமைப்பு தொடங்கிய காலம் முதலான, எனது 53 ஆண்டு பொதுவாழ்வில் ஒருபோதும் நேர்மையை நான் விட்டுக்கொடுத்து வாழ்ந்ததில்லை. குடும்ப வருமானத்திற்காக மதுக்கடை எடுத்து நடத்து என்று எம்.ஜி.ஆர். நேரில் என்னிடம் சொன்னபோது, மதுவால் கிடைக்கும் வருமானம் கூடாது என்ற கொள்கைக்காக அதனை ஏற்க மறுத்தவன். மதுவுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருபவன். இப்போதும், ஓர் ஆண்டு காலம் மது குடிக்காமல் மீண்டுவரும் மது அடிமைகளுக்கு, 1 சவரன் தங்க மோதிரம் பரிசு வழங்குபவன்.

அதேபோன்று தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வழங்குவதற்கு கொள்கை முடிவெடுக்கப்பட்ட நேரத்திலேயே, எனக்கு முதல் வாய்ப்பு வந்தது. தொழிலாக கல்வியை விற்பனை செய்து பணம் சம்பாதிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்ற கொள்கைக்காக வாய்ப்பை நிராகரித்தேன். நான் நினைத்திருந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பல்கலைக்கழகம் தொடங்கி, கல்வித்தந்தை என்ற பெயருடன் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்க முடியும்.

கல்வியை இலவசமாகக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, மனிதநேயம் மூலம் ஒவ்வோர் ஆண்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். எனப்படும் குடிமைப்பணித் தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. போன்ற பல்வேறு மத்திய, மாநில அரசு பணித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். இதனை தொழிலாக நினைத்து போட்டி நிறுவனங்கள் வசூல் செய்யும் கட்டணத்தில் பாதி அளவு நான் நிர்ணயித்தால் கூட, 100 கோடிக்கு மேல் நான் ஆண்டு வருமானம் பார்க்க முடியும். ஆனால் கல்விக்கு விலை கூடாது என்ற கொள்கைக்காக, நான் தொழில் செய்து சம்பாதித்த சொத்துக்களை விற்பனை செய்து, கல்விச் சேவை புரிந்து வருகிறேன்.

புரட்சித்தலைவர் எனக்குக் கொடுத்த சி.ஐ.டி. நகர் இல்லத்தைக் கூட மனிதநேய கல்வி அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிவிட்டு, அந்த அறக்கட்டளைக்கு வாடகை கொடுத்து நான் குடியிருந்து வருகிறேன். வேளச்சேரி, பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம், கோடிகளில் மதிப்பு பெறும் 13 கிரவுண்ட் இடத்தில், இலவச திருமண மண்டபம் கட்டி, ஏழைகளுக்கு எந்த விதமான செலவும் இல்லாமல் திருமணம் நடத்துவதற்கு கொடுத்து வருகிறேன்.

இப்படி அறம் சார்ந்த வாழ்க்கை நடத்திவரும் என் மீது அவதூறு வீசும் மு.க.ஸ்டாலின், இதுபோன்று ஏதேனும் ஒரு சேவை செய்ததாக சுட்டிக்காட்ட முடியுமா? அல்லது சேவை செய்யும் நல்ல பண்புதான் இருக்கிறதா?. மீண்டும் மீண்டும் என் மீது அவதூறு கூறிவரும் மு.க.ஸ்டாலின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர இருக்கிறேன்.

மூலக்கதை