தோல், காலணி துறை வளர்ச்சிக்கு ரூ.2,600 கோடி ஊக்க திட்டம்
புதுடில்லி : மத்திய அரசு, தோல் மற்றும் காலணி துறைக்கு, 2,600 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத் திட்டத்தை, விரைவில் அறிவிக்க உள்ளது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜவுளித் துறையை தொடர்ந்து, தோல் மற்றும் காலணி துறைக்கும், 2,600 கோடி ரூபாய்க்கு ஊக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. வரி மற்றும் வரி சாரா சலுகைகளை கொண்டதாக, இந்த திட்டம் இருக்கும். தோல் மற்றும் காலணி துறை, ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது. இத்துறை, ஒரு கோடி ரூபாய் முதலீட்டில், 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க வல்லது. தற்போது, இத்துறையில், 30 லட்சம் பேர் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்திய தோல் மற்றும் காலணிகள் ஏற்றுமதிக்கு, சீனா போட்டியாக விளங்குகிறது. அக்டோபரில், தோல் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 9 சதவீதம் சரிவடைந்து, 37 கோடி டாலராக குறைந்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஊக்கத் திட்டம் அமலுக்கு வந்தால், தோல் மற்றும் காலணி துறையில் வேலைவாய்ப்பு பெருகும்; ஏற்றுமதியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.