நிதி சாரா நிறுவனங்கள் கடன் தகுதி உயரும்; பொருளாதார வளர்ச்சி விறுவிறுப்படையும்
மும்பை : ‘இந்தியாவில், 2018ல், நிதி சாரா நிறுவனங்களின் கடன் தகுதி மேம்படும்; நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீளும்’ என, அமெரிக்காவைச் சேர்ந்த, தர நிர்ணய நிறுவனமான, ‘மூடிஸ்’ தெரிவித்து உள்ளது.
கடந்த வாரம், இந்தியாவின் கடன் தகுதி மதிப்பை, 13 ஆண்டுகளுக்கு பின், சாதகமான பிரிவில் இருந்து, ஒரு நிலை உயர்த்தி, ஸ்திரமான பிரிவில் சேர்த்த, ‘மூடிஸ்’ தற்போது, ‘நிதி சாரா நிறுவனங்களின் கடன் தகுதி மேம்படும்’ எனக் கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கை: நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த, 12 – 18 மாதங்களில், 7.6 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இதனால், பொருட்களின் விற்பனை உயரும்; நிறுவனங்களின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும்; மூலப்பொருட்கள் விலை மிதமான அளவில் இருக்கும். இத்தகைய காரணங்களால், மதிப்பீட்டு காலத்தில், நிதி சாரா நிறுவனங்களின், வரிக்கு முந்தைய வருவாய் வளர்ச்சி, 5 – 6 சதவீதம் அதிகரிக்கும்.
பெரும்பாலான நிறுவனங்கள், அவற்றின் நிதி தேவைகளை, ரொக்க கையிருப்பு மற்றும் பங்குச் சந்தைகள் வாயிலாக பூர்த்தி செய்து கொள்ளும். அடுத்த மூன்று ஆண்டுகளில், கடன் பத்திரங்களின் முதிர்ச்சியை சமாளிக்கக் கூடிய அளவிற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆற்றல் அதிகரிக்கும். ஜி.எஸ்.டி., உள்ளிட்ட சீர்திருத்த நடவடிக்கைகளும், மூலப்பொருட்களின் மிதமான விலை நிலவரமும், நிறுவனங்களின் செயல்பாட்டு லாபத்தை அதிகரிக்க
உதவும். இதனால், நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பு உயரும்.
இதுதவிர, நிறுவனங்களின் சொத்து மதிப்பும் உயரும் என்பதால், அவற்றின் ஒட்டுமொத்த கடன் தகுதி மதிப்பு அதிகரிக்கும். அதே சமயம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6 சதவீதத்திற்கும் கீழாக வீழ்ச்சி கண்டாலோ அல்லது விளை பொருட்கள் விலை சரிவடைந்தாலோ, நிதி சாரா நிறுவனங்களின் வரிக்கு முந்தைய வருவாய் வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளது. மேலும், மத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் உண்டாகும் தாமதம்; ஸ்திரமற்ற அரசியல் சூழல்; வட்டி உயர்வு; பணவீக்கம் அதிகரிப்பு; டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் அதிக ஏற்ற, இறக்கம் போன்றவை நிகழ்ந்தால், நிறுவனங்களின் வளர்ச்சி தடைபடும். அவற்றின் கடன் தகுதி மதிப்பு குறையும் ஆபத்தும் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லாப வரம்பில் தாக்கம்:
எண்ணெய், ரியல் எஸ்டேட், வாகனம், வாகன உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் கடன் தகுதி மதிப்பு, சாதகமான நிலையில் இருக்கும். தொலை தொடர்பு துறையில் நிலவும் கடும் போட்டி, அடுத்த, 12 மாதங்களில், முன்னணி நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்பில் தாக்கத்தை ஏற்படுத்தும்.