‘வாட்ஸ் ஆப்’பில் வர்த்தக ரகசியம் கசிவு; ‘செபி’ வளையத்தில் 24 நிறுவனங்கள்
புதுடில்லி : நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள், அதிகாரபூர்வமாக வெளி வருவதற்கு முன்பாகவே, அவை, ‘வாட்ஸ் ஆப்’ குழுவில் கசிந்தது தொடர்பாக, 24 நிறுவனங்களை, ‘செபி’ கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளது.
ஜூலையில், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் நிறுவனத்தின், முதல் காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியாகும் முன், அந்நிறுவனம் இழப்பை சந்திக்கும் என, ‘மார்கெட் சாட்டர்’ உள்ளிட்ட சில, ‘வாட்ஸ் ஆப்’ குழுக்களில், தகவல் பரவியது. அதற்கேற்ப, மூன்று நாட்கள் கழித்து வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், 50 கோடி ரூபாய் இழப்பை கண்டிருந்தது. இதே போல, 12 நிறுவனங்களின் நிதி நிலை தகவல்கள், அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பாகவே, வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவின.
இந்த கசிவு குறித்த தகவல், சமீபத்தில் வெளியானதை அடுத்து, 24 நிறுவனங்களின் பங்கு வர்த்தக நிலவரம் குறித்து, ‘செபி’ ஆய்வு செய்கிறது. இந்நிறுவனங்கள், விதிகளை மீறி, பங்கு வர்த்தகத்தில் ஆதாயம் பெறும் நோக்கோடு, தகவல்களை முன்னதாக கசிய விட்டது நிரூபணமானால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.