சரக்கு போக்குவரத்து துறைக்கு அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து
மும்பை : சரக்கு போக்குவரத்து துறைக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து வழங்கும் மத்திய அரசின் முடிவை, இத்துறை சார்ந்த நிறுவனங்கள் வரவேற்று உள்ளன.
அடிப்படை கட்டமைப்பு துறையில், எரிசக்தி, குடிநீர், சுகாதாரம், தகவல் தொடர்பு, சமூகம் மற்றும் வர்த்தக உட்கட்டமைப்பு வசதிகள் இடம் பெற்றுள்ளன. தற்போது, சரக்கு போக்குவரத்து, சரக்கு பெட்டக பணிமனைகள், குளிர்சாதன கிடங்குகள், சரக்கு கிடங்குகள் ஆகியவற்றுக்கு, அடிப்படை கட்டமைப்பு வசதி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.
இது குறித்து, மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, பிரோஜ்ஷா சர்காரி கூறியதாவது: சரக்கு போக்குவரத்து துறைக்கு, அடிப்படை கட்டமைப்பு அந்தஸ்து அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், சரக்கு போக்குவரத்து செலவு குறையும். ஜி.எஸ்.டி., அறிமுகம் காரணமாக, சுங்கச்சாவடிகளில், சரக்கு லாரிகள் நிற்காமல் செல்வதால், நேரமும், போக்குவரத்து செலவும், 20 சதவீதம் மிச்சமாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அவ்வாஷ்யா, சி.சி.ஐ., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, தீபல் ஷா கூறுகையில், ‘‘அரசின் முடிவால், சரக்கு போக்குவரத்து துறையினரின் செலவு, 0.50 சதவீதம் மிச்சமாகும். அத்துடன், குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்,’’ என்றார்.
முதலீடு:
அடிப்படை கட்டமைப்பு துறையில், குறைந்த பட்சம், 10 ஏக்கரில், 50 கோடி ரூபாய் முதலீட்டில், சரக்கு பெட்டக பணிமனைகளை உள்ளடக்கிய, பன்முக சரக்கு போக்குவரத்து பூங்காக்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 15 கோடி ரூபாய் முதலீட்டிலான, குளிர்பதன கிடங்கு, 25 கோடி ரூபாயில் அமைக்கப்படும். சரக்கு கிடங்குகளும், இப்பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.