இரு காவல்துறை அதிகாரிகளுக்கு சிறைத்தண்டனை! - இணையத்தில் பரவிய காணொளியால் பரபரப்பு!!
காவல்துறை அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை மோசமாக தாக்கி அவமானப்படுத்திய காணொளி ஒன்று இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவரை மடக்கி கீழே விழுத்தி அவரை தாக்கியும், அவர் மீது எச்சில் துப்பியும், மகிழுந்தின் மேல் சிறுநீர் கழித்த குற்றத்துக்காகவும் குறித்த அதிகாரிக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை தடுக்காமல் அதை கேமரா ஒன்றின் மூலம் படமாக்கிய குற்றத்துக்காக பிறிதொரு காவல்துறை அதிகாரிக்கு 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படுள்ளது. குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது. சம்பவம் இவ்வருடம் மே மாதம் 27 ஆம் திகதி, செந்தனியின் Lilas நகரில் இடம்பெற்றுள்ளது. 1985 ஆம் ஆண்டு பிறந்த குறித்த அதிகாரிக்கு ஐந்து வருடங்கள் பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொபினி அரச வழக்கறிஞர் தெரிவிக்கும் போது, ' காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பதற்கு பதிலாக தாக்கியுள்ளனர். நான் இதை அவமானமாக கருதுகிறேன்!' என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைகளில், விருந்து ஒன்றில் கலந்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும், 'நான் நிதானமாக செயற்படவில்லை!' என குறித்த அதிகாரி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.