போராடி தோற்றது சென்னையின் எப்சி

தினகரன்  தினகரன்

சென்னை : இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டித் தொடரில், சென்னையின் எப்சி அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் எப்சி கோவா அணியிடம் போராடி தோற்றது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கத்தில் இருந்தே துடிப்புடன் விளையாடி ஆதிக்கம் செலுத்திய கோவா அணிக்கு 25வது நிமிடத்தில் பெர்ரன் டெலிசியா கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். அடுத்து மேனுவல் புரூனோ 29வது நிமிடத்திலும், மந்தர் தேசாய் 39வது நிமிடத்திலும் கோல் அடிக்க, இடைவேளையின்போது கோவா அணி 3-0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியில் ரசிகர்கள் கொடுத்த உற்சாகத்தால் முனைப்புடன் விளையாடிய சென்னையின் எப்சி அணிக்கு இனிகோ கால்டெரான் (70வது நிமிடம்), ரபேல் அகஸ்டோ (84வது நிமிடம், பெனால்டி) கோல் அடிக்க ஆட்டம் பரபரப்பானது. மேற்கொண்டு கோல் அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் எப்சி கோவா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

மூலக்கதை