ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கும் சந்தை மாற்றங்கள்
சற்றும் எதிர்பாராத நேரத்தில் வந்த இன்ப அதிர்ச்சியான செய்தி, ‘மூடீஸ்’ நிறுவனம், இந்தியாவிற்கு அளித்த தர மதிப்பீட்டிற்கான உயர்வு!பல ஆண்டுகளாக இந்திய அரசு தன்னிலை விளக்கங்களையும், உயர்வுக்கான வாதங்களையும் தொடர்ந்து, ‘மூடீஸ்’ நிறுவனத்தின் முன் நிறுத்தியும், சற்றும் நிலை மாற்றம் ஏற்படாத சூழலில், இப்போது வந்திருக்கும் இந்த நற்செய்தி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.அரசியல்ரீதியாகவே, இந்த பொருளாதார அளவீட்டை பார்க்கின்றனர். இந்த உயர்வு எதனால் அமைந்தது என்ற கேள்வி எழாமலில்லை. இந்நிலையில், ‘மூடீஸ்’ வெளியிட்ட விளக்க அறிக்கை சொல்லும் தெளிவான காரணம் மிக முக்கியமானது.பொருளாதாரம் மற்றும் நிறுவன சீர்திருத்தங்களில் தெரியும் தொடர் முன்னேற்றம், வருங்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாகவும், வருங்கால வளர்ச்சி பெருக்கம் ஏற்பட தேவையான சூழல் அமைக்கப்படுவதாகவும் ‘மூடீஸ்’ அறிக்கை தெளிவுபடுத்துகிறது.மத்திய அரசின் கடன்களும் ஸ்திரப்படுத்தப்பட்டு, வரும் ஆண்டுகளில் கடன் சுமை குறையும் என்று எதிர்பார்க்கும், ‘மூடீஸ்’, இதற்கு முக்கிய காரணமாக, தற்போது நடைபெறும் பொருளாதார சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டுகிறது.வருங்கால போட்டி சூழலுக்கு, இந்தியா தன்னை நன்கு தயார்படுத்தி வருவதாகவும், மாநிலங்களுக்கு இடயிலான வர்த்தகம் சீராகி வருவதாகவும், ஆய்வு குறிப்பு சொல்கிறது. ஆனால், இதன் வெளிப்பாடு வளர்ச்சியில் தெரிய சிலகாலம் ஆகும் என, ‘மூடீஸ்’ குறிப்பு விளக்குகிறது.அதேசமயம், ஜி.எஸ்.டி.,அமலில் காணப்படும் சிக்கல்கள், தனியார் முதலீட்டில் நிலவும் தேக்கம், பொதுத்துறை வங்கி வாராக்கடன் பிரச்னை தீர்வில் தெரியும் மிதமான முன்னேற்றம் ஆகியவை கூர்ந்து கவனிக்கப்பட வேண்டுமென, ‘மூடீஸ்’ கருதுகிறது.நிகழும் சீர்திருத்தங்கள் நாட்டின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும் என்ற புரிதல் மக்களுக்கு ஏற்பட இந்த தர மதிப்பீட்டு உயர்வு பெரிதும் உதவும்.வளர்ச்சி எங்கே குறைந்துவிடுமோ என்ற அச்ச உணர்வு மக்கள் மனதில் உருவெடுக்காமல், எதிர்காலம் வளர்ச்சி சார்ந்த நம்பிக்கையூட்டும் வண்ணம் இந்த உயர்வு அமையும். பொருளாதார சீர்த்திருத்தங்களை வேகப்படுத்த, தேவையான அரசியல் முதலீடு இந்த அறிவிப்பு மூலம் அரசுக்கு கிடைக்கிறது.ஏற்கனவே உயர்நிலையில் இருக்கும் இந்திய பங்குச் சந்தை, இந்த அறிவிப்பை எப்படி பார்க்கும்?இதற்கு முன் வந்த இந்தகைய உயர்வுகளை சந்தை கொண்டாடி, சில நாட்கள் உயர்ந்தாலும், அதன்பின் சரிந்தன என்பதே வரலாறு. ஆனால், பணவரத்து அதிகமாக இருக்கும் இச்சூழலில், சந்தை சரிவு காண, பன்னாட்டு சந்தை நிகழ்வுகள் மட்டுமே காரணமாக அமையும். அதை முன்கூட்டியே கணிக்க இயலாது.ஆகவே, முதலீட்டாளர்கள் தங்கள் தேர்வுகளை பெருநிறுவனங்கள் சார்ந்தும், உள்கட்டமைப்பு, விவசாயம், நுகர்வு மற்றும் ஏற்றுமதி துறைகள் சார்ந்தும் அமைத்துக் கொள்ள வேண்டும்.வரும் காலாண்டுகளில், பெருவாரியாக நம் முதலீடுகளை மாற்றி அமைக்க வேண்டிவரும். அதற்கு நம்மை தயார்படுத்தி, முடிவுகளை நிதானமாக அமல்படுத்த வேண்டும்.சந்தையில் சிறு மற்றும் குறுநிறுவனங்கள் சார்ந்து இருக்கும் பிறரது முதலீடுகள் பெருநிறுவனங்கள் நோக்கி நகர்வதற்கு முன்பே நாம் அத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டும்.சந்தை மாற்றங்கள் எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்த காத்திருக்கும். அத்தகைய மாற்றங்களை கடக்கவும், சாதகமாக மாறிக்கொள்ளவும் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும்.