காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை : டிசம்பர் முதல்வாரத்தில் பதவியேற்க வாய்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காங்கிரஸ் செயற்குழு நாளை கூடுகிறது தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை : டிசம்பர் முதல்வாரத்தில் பதவியேற்க வாய்ப்பு

புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பதற்கான தேதி முடிவு செய்யப்படுகிறது.

டிசம்பர் முதல்வாரத்தில் கட்சியின் தலைவராக ராகுல் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். சுமார் 19 ஆண்டுகாலம் இப்பதவியை வகித்து வருகிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டுமென மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதை சோனியா காந்தியும் ஏற்றுக் கொண்டார். ராகுலுக்கு விரைவில் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அது தள்ளிப்போய் கொண்டே வந்தது.

குஜராத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாகவே ராகுலை தலைவராக அறிவிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது.

சோனியா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கட்சியின் புதிய தலைவராக ராகுலை தேர்தெடுப்பதற்கான தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

டிசம்பர் முதல்வாரத்தில் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிகிறது.

2013ம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவரானார் ராகுல். கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, தற்போது குஜராத் தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால் காங்கிரசின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராகுல் தலைவராகும் பட்சத்தில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், பாஜவுக்கு பெரும் சவாலாக விளங்குவார் என காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை