குழந்தையை கடத்திய பெண் சிக்கினார் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பரபரப்பு

தினமலர்  தினமலர்
குழந்தையை கடத்திய பெண் சிக்கினார் ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் பரபரப்பு

ராயபுரம் : ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தை, 10 நிமிடங்களில், மருத்துவமனை வளாகத்திலேயே மீட்கப்பட்ட நிலையில், கடத்தல் பெண்ணை, போலீசார் கைது செய்தனர்.சமீப காலமாக, தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில், பச்சிளம் குழந்தைகளை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சென்னையிலும், மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.10 நிமிடங்கள்இந்நிலையில், ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில், நேற்று பச்சிளம் குழந்தை ஒன்று கடத்தப்பட்டது. சுதாரித்த மருத்துவமனை ஊழியர்களால், அந்த குழந்தை கடத்தப்பட்ட, 10 நிமிடங்களில் மீட்கப்பட்டது.இது குறித்த விபரம் வருமாறு:திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, அரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்குமார், 26; எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி, 25. கடந்த, 10 நாட்களுக்கு முன், குழந்தை பிறப்புக்காக, ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு, கடந்த, 14ம் தேதி, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின், ஒன்பதாவது வார்டுக்கு செல்வி மாற்றப்பட்டார்.நேற்று மதியம், 12:00 மணிக்கு, பக்கத்து வார்டில் உள்ளவர்களிடம், குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, செல்வி கழிப்பறைக்கு சென்றார்.அப்போது, 'பர்தா' அணிந்து வந்த பெண் ஒருவர், கண் இமைக்கும் நேரத்தில், செல்வியின் குழந்தையை துாக்கிக் கொண்டு ஓடினார். இதை பார்த்த, பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.ரூ.10 ஆயிரம்மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செவிலியர்கள், மருத்துவமனை காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்டோர், கடத்தல் பெண்ணை தேடினர்.அப்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சமையறையில் ஒளிந்து கொண்டிருந்த, அப்பெண்ணை, மருத்துவமனை காவலர்கள் யோகராஜ், ராணி ஆகியோர் மடக்கி பிடித்தனர்.மருத்துவமனை ஆர்.எம்.ஓ., அனிதா கொடுத்த புகாரின் பேரில், ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். உதவி கமிஷனர் ரகுராம், இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட் ஆகியோர் அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.இதில், கடத்தலில் ஈடுபட்டது, புதுச்சேரியைச் சேர்ந்த ரம்ஜான் பேகம், 36, என்பதும், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நடைபாதைவாசி என்பதும், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக மர்ம நபர் கூறியதால், குழந்தையை கடத்தியதும் தெரிய வந்தது.இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டு, தலைமறைவான, ரம்ஜான் பேகத்தின் கூட்டாளி ரெஜினா பேகத்தை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் பின்னணியில், குழந்தை கடத்தல் கும்பல் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

மூலக்கதை