முதல்வர் பற்றி அவதூறு பெங்களூரு புகழேந்திக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் பற்றி அவதூறு பெங்களூரு புகழேந்திக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன்

சேலம்: அதிமுக டிடிவி தினகரன் அணியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில், கடந்த மாதம் 5ம் தேதி துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக குறிப்பிடப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், டிடிவி தினகரன், அவரது ஆதரவாளர் பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், வீரபாண்டி செல்வம் உள்பட 17 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் டிடிவி தினகரன், பெங்களூரு புகழேந்தியை தவிர, அனைவரும் ஜாமீன் பெற்றுவிட்டனர். இந்நிலையில், சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பெங்களூரு புகழேந்தி, முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி மோகன்ராஜ், பெங்களூரு புகழேந்திக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கினார்.

அதன்படி, ஓசூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தினமும் காலை 10. 30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார்.

.

மூலக்கதை